Monday, December 12, 2011

மற்றவை - முல்லை பெரியாறு அணை


முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக அ.மார்க்ஸ் என்பவர் எழுதிய இந்தக் கட்டுரையை படித்து பாருங்கள். பெரியாறு அணையைப் பற்றிய  பிரச்சனையின் தாக்கம் நமக்கும் புரியும். 

முல்லைப் பெரியாறு அணை: கேரள தமிழக உணர்ச்சி அரசியல் அ.மார்க்ஸ்:

கோயம்புத்தூரிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர்ப்பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலயாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். தென்கோடித் தமிழகமான கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்காப்பியரின் ஆசான் பிறந்த அதங்கோடு இங்கேதான் இருக்கிறது. இங்கே பேசப்படும் மலையாளங் கலந்த தமிழை ‘எல்லைத் தமிழ்’ என்பாருண்டு. அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரமாகப் பயணித்தீர்களானால் கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் வரை நீங்கள் சரளமாக யாருடனும் தமிழ் பேசலாம்.
அரிசி, காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் கேரளத்திற்கு தமிழகத்திலிருந்துதான் போகின்றன. தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு மலையாளத்தாரின் தேநீர்க்கடை இருக்கும். கிட்டத்தட்ட தமிழக முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும்  மலையாள ஆலுக்காஸ் குழும நகைக் கடைகளும், முத்தூட் நிதி நிறுவனங்களும் சமீப காலமாகப் பரவியுள்ளன. மலையாளத்தார்கள் மத்தியிலுள்ள ஒற்றுமை உணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமை, இன உணர்வு, தொழில் முனைவு ஆகியன குறித்து தமிழர்கள் மத்தியில் ஒருவகை ஏக்கமும் கோபமும்  உண்டு. சமீபத்தில் நான் சவூதி சென்றிருந்த பொழுது அங்கே மத உணர்வைத் தாண்டி தமிழர்கள் மத்தியிலுஞ்சரி, மலையாளிகள் மத்தியிலுஞ்சரி இந்த மொழி அடையாளம் கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

சமீபகாலமாக இருதரப்பிலும் இந்த இன உணர்வும் அதன் இன்னொரு பக்கமான இன வெறுப்பும் கூடுதலடைவதில் முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு பக்கத்திலும் இன உணர்வு இயக்கங்கள் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுமே இதற்குக் காரணமாகியுள்ளன. கேரளத்தைப் பொருத்த மட்டில் பரம வைரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் இந்த விசயத்தில் ஒரே குரலில் முழங்குகின்றன. அங்கே இன உணர்வு இயக்கம் என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் எல்லா மையநீரோட்ட அரசியல் கட்சிகளுமே அந்தக் ‘குறை’யைப் போக்கக் கூடியனவாகவே உள்ளன.
கடந்த நான்கைந்து  நாட்களாக இரு மாநிலங்களிலும் எல்லையோரங்களில் பதட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்களின் கடைகள் தாக்கப்படுகின்றன. இன்றைய நாளிதழ்ச் செய்திகளின்படி இங்கே கோவையில் மட்டும் 37 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களெல்லாம் கேரளத்தில் தாக்கப்படுன்றனர். தற்போது நடந்து கொண்டுள்ள இந்த வன்முறைகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் பொருத்த மட்டில் கேரள அரசியல்வாதிகளுக்கே பெருத்த பங்கிருக்கிறது. சென்ற மாதம் பெய்த கடும் மழையில் முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய உடனேயே கட்சி வேறுபாடுகளின்றி அணை உடையும் பீதிப் பிரச்சாரத்தைப் பல்வேறு வடிவங்களில் அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். பெரிய அளவில் போட்டிபோட்டுக் கொண்டு போராட்டங்களையும் கேரளக் கட்சிகள் நடத்தத் தொடங்கின. இது இங்கேயும் கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்தது. இயக்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அப்பால் முல்லைப் பெரியாறு அணைப் பாசன விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கேரளத்திற்குச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
முல்லைபெரியாறு அணை 116 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள-தமிழ்நாடு எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேக்கடியில் கட்டப்பட்டது. 1886ம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னருடன் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணம் செய்துகொண்ட  ஒப்பந்தத்தின்படி நீர்த்தேக்கத்திற்கென 8000 ஏக்கர் நிலத்தையும் அணைக்கென மேலும் 100 ஏக்கர் நிலத்தையும் 999 ஆண்டு குத்தகைக்கு திருவிதாங்கூர் அரசு அளித்தது. கேரளத்தில் ஒடுகிற பெரியாறின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 4576 சதுர கி.மீட்டரில் 114 சதுர கி.மீ மட்டுமே தமிழக எல்லையில் அமைந்துள்ளது. எனினும் ஆண்டுதோறும் நீரோடும் இந்த ஆற்று நீர், அணை கட்டப்படுவதற்கு முன், எவ்விதப் பயனும் இன்றி கேரள எல்லைக்குள் ஓடி அரபிக் கடலில் கலந்தது. அதே நேரத்தில் மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் இராமானாதபுரத்தின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றிக் காய்ந்து கிடந்ததை ஒட்டி பிரிட்டிஷ் அரசு முல்லை ஆறும் பெரியாறும் கலக்கும் இந்த இடத்தில் இப்படி ஒரு அணையைக் கட்டி, மேற்குத் திசையிலோடி அரபிக் கடலில் கலந்த பெரியாற்று நீரைக் கிழக்குத் திசையில் வங்கக் கடலை நோக்கித் திருப்பியது.

1887- 1895 ஆண்டுகளில் இராணுவ உதவியுடன் மேஜர் பென்னிகுயிக் என்கிற பொறியாளர் சுண்ணாம்பையும் செஞ்சாந்தையும் கொண்டு இந்த அணையைக் கட்டி முடித்தார். அருகில் சிற்றணை ஒன்றும் இத்துடன் இணைந்துள்ளது. திருப்பப்பட்ட நீர் வைகை ஆற்றையும் அணையையும் நிரப்பித் தமிழ்ப் பகுதிகளில் பாசனத்திற்கு வழி செய்தது. பின்னர் மின்சார உற்பத்திக்கும் இந்நீர் பயன்படுத்தப்பட்டது. அணையைக் கட்டிய பென்னிகுயிக் இன்றளவும் இப்பகுதி தமிழ் விவசாயிகளால் நன்றியுடன் நினைவுகூறப்படுகிறார். மதுரையிலுள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அவருக்கொரு சிலையும் உண்டு. அணையை கட்டிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டப் பணப் பற்றாக் குறையைச் சரிகட்ட தனது மனைவியின் நகைகளை அவர் விற்றார் எனவும் சொல்லப்படுகிறது.
தரை மட்டத்திலிருந்து 881 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ் அணை 176 அடி உயரம் உடையது. 22.5 டி.எம்.சி நீர் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இதன் மூலம் கிடைக்கிறது. அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ள போதிலும் அணையின் நிர்வாகம், அணையின் நீர்ப் பயன்பாடு எல்லாம் தமிழகத்திற்கே உரியது. இதற்கென திருவிதாங்கூர் அரசுக்குச் சென்னை மாகாண அரசு ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் குத்தகை அளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். பிரிட்டிஷ் ஆட்சி போனபின் (1947), ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் பலமுறை (1950, 58, 69) பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியில் அச்சுதமேனன் கேரள முதலமைச்சராக இருந்தபோது (1970) ஏக்கர் ஒன்றிற்குக் குத்தகைத் தொகை ரூ 30ம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிலோவாட்டுக்கு ரூ12ம் கொடுக்க வேண்டுமென ஒப்பந்தம் திருத்தப்பட்டது. இதன்படி தற்போது ஆண்டொன்றுக்கு 2.5 லட்ச ரூபாய் நில வாடகையாகவும், 7.5 லட்ச ரூபாய் மின்சார உற்பத்திக்காகவும் தமிழக அரசு கேரளத்திற்குக் கொடுத்து வருகிறது. எனினும் இந்த ஒப்பந்தம் கேரள அரசுக்குத் திருப்தியளிக்கவில்லை. வழக்குகள் நிலுவையிலுள்ளன.

999 ஆண்டு கால ஒப்பந்தம், தங்கள் ஆற்று நீரின் பயன்பாட்டைத் தமிழக மக்கள் அனுபவிப்பது ஆகியவற்றைக் கேரள அரசியல்வாதிகளின் மனம் ஏற்க மறுத்தது. இதை வைத்து ஒரு உணர்ச்சி அரசியலொன்று அங்கே கட்டமைக்கப் பட்டது. இதற்கிடையில் முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழாக 50 கி.மீ தொலைவில் மூன்று மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணையைக் கேரள அரசு கட்டியது. 1979ல் மோர்வி அணை உடைந்து சேதம் ஏற்படுத்தியதை ஒட்டி காலத்தால் பழசாகிப் போனதும், நீர்க்கசிவு உடையதும், ரொம்பப் பழைய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டதும், புவி அதிர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ளதுமான முல்லைப் பெரியாறு அணை உடையும் பட்சத்தில் இடுக்கி, ஆலப்புழை, பந்தனந்திட்டாப் பகுதிகளில் வாழும் சுமார் 40 இலட்சம் மக்கள் அழிவது உறுதி எனப் பீதியூட்டிப் பிரச்சாரங்கள் செய்யப் பட்டன.  பெரியாறு அணை உடைந்தால் கீழே உள்ள இடுக்கி உட்பட மேலும் இரண்டு அணைகள் சேர்ந்து உடைந்து சேதத்தை அதிகமாக்கும் எனவும் அரிய உயிரினங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த பெரியாறு வனப் பகுதியும் அழியும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அணை உறுதியாக உள்ளது. அது உடைவதற்கு வாய்ப்பே கிடையாது. உடைந்தாலும் மும்மடங்கு அதிகக் கொள்ளளவு உள்ள இடுக்கி அணை நீர்ப்பெருக்கைத் தாங்கிக் கொள்ளும். முற்றிலும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடிய புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கான சதி முயற்சியாகவே கேரள அரசும் அரசியல் கட்சிகளும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்பது தமிழகத் தரப்பில் பேசப்படும் நியாயம். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்தாலோ நீர் நிர்வாகத்தைக் கேரள அரசு வைத்துக்கொண்டாலோ அது மிகப்பெரிய இழப்பாக முடியும் என்கிற நியாயமான  அச்சம் தமிழக விவசாயிகளைச் சூழ்ந்தது.

கேரள அரசு, அணைப் பாதுகாப்பு குறித்து எழுப்பிய பிரச்சினையை ஒட்டி மத்திய நீர் ஆணையம், அணையிலுள்ள நீரின் அளவை 142.2 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ள ஆணையிட்டது. தமிழக அரசு பணிந்த போதும் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் எனவும் அதன்மூலம் மேலும் 11.25 டி.எம்.சி நீர் தமிழகத்திர்குக் கிடைப்பதைத் தடுக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. குறைந்த பட்சம்  145 அடி உயரம் வரையேனும் நீரைத் தேக்கி வைக்க அனுமதி வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. கேரள அரசு இதை ஏற்காததைத் தொடர்ந்து அணைப் பாதுகாப்பைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.  தமிழக, கேரள அரசுகளின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதிகள் அக்குழுவில் இருந்தனர்.
அணை பாதுகாப்பாக உள்ளது எனவும், 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம் எனவும் நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவ்வாறே ஆணையிட்டது. அணையில் தேவையான பராமரிப்புப் பணிகளச் செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. நீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்த கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்டி சென்ற மார்ச் 2006ல் அணைப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி 136 அடிக்கு மேல் தமிழக அரசு நீர்மட்டத்தை உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டது. சேதம் விளைவிக்க்க் கூடிய அணை தொடர்பான நடவடிக்கைகள் எதுவாயினும் கேரள அரசின் ஒப்புதலில்லாமல் மேற்கொள்ளக் கூடாது எனவும் அச்சட்டம் வரையறுத்துள்ளது. அணையில் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் கெரளத் தரப்பில் இடையூறுகள் செய்யப்படுகின்றன..

உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கேரள அரசு இயற்றியுள்ள இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தை அணுகியது. அப்படியான ஒரு ஆணையை இட மறுத்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் மீண்டும் ஒரு குழுவை நியமித்தது. இரு அரசுகளும் ஒவ்வொரு உறுப்பினரை இக்குழுவில் நியமித்துக் கொல்ளலாம் என்பதைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மேலும் ஒரு குழு எதற்கு என்கிற நியாயமான கேள்வியைத் அது எழுப்புகிறது. கேரள அரசோ ஓய்வு பெற்ற நீதிபதி கே.டிதாமஸை இகுழுவிற்கு நியமித்துள்ளது.
நில அதிர்வுப் பீதியைக் கேரள அரசு எழுப்பியதையொட்டி தமிழக அரசு அணைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைத்த  நால்வர் குழு இந்தியத் தர நிர்ணயங்களின்படி அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. இப்பகுதியில் நில அதிர்வு மூன்றாம் அளவு நிலைக்குள்ளேயே உள்ளது என்பதால் ஆபத்துக்கு வாய்ப்பில்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
எனினும் கேரள அரசு ஐ.ஐ.டி நிறுவனத்தை ஆய்வு செய்யச் சொல்லி அது அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.  அணை நில அதிர்வைத் தாங்காது என்பது அவ்வறிக்கையின் சாரம். இந் நிறுவனம் நீதிமன்றத்திற்கு வந்து அதன் கூற்றை நிரூபிக்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

இந்தப் பின்னணியில்தான் இன்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நிறைவேறியுள்ளன. இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் உருவாகியுள்ளது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பீதியையும், உணர்ச்சியையும் தூண்டும் வகையில்  பேசுவதை இரு தரப்பு அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். கூடங்குளப் பிரச்சினையில் இரு மாநில மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடன் இந்திய அரசு செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதை இரு தரப்பினரும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டிய தருணம் இது. தமிழக விவசாயிகளின் அச்சம், அணைப் பாதுக்காப்பு குறித்த கேரள மக்களின் கவலை இரண்டிலுமுள்ள நியாயங்களை இரு தரப்பும் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். வன்முறைகளைக் கைவிடுமாறு இரு தரப்பினரும் கூட்டறிக்கைகளை விட வேண்டும். உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதன்பின் கேரள அரசு தனது கவலைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும். தேவையானால் தமிழகப் பகுதியில் மேலும் இரு சிற்றணைகளைக் கட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் திட்டத்தையும் யோசிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் பாரம்பரிய உரிமைகளை மதித்தலும், பேச்சுவார்த்தைகளும் மட்டுமே பலனளிக்கும். இனவாத உணர்ச்சி அரசியல், பிரச்சினைகளை மிகைப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஆனால் அத்தகைய கருத்துக்களே இங்கு முகநூல் முதலான இணயத் தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ‘மலையாள மனோபாவம்” என்றெல்லாம் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது. இது போன்ற பிரச்சாரங்கள் அங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. முகநூல் பக்கங்களில் அறிவார்ந்த கட்டுரைகள் எழுதுகிற பல நண்பர்கள் காட்டும் மவுனமும் கவலை அளிக்கிறது.

இன் நிலையில் நேற்று (டிச 9) புதுச்சேரியில் தோழர் சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைப் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட தோழர் கல்யாணி ( பேரா. கல்விமணி ) அவர்கள் தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்படுவது குறித்தும், அங்கே தமிழர்கள் கடைகள் தாக்கப்படுவது குறித்தும் கண்டன அறிக்கை ஒன்றை நாம் வெளியிட வேண்டும் என்று் கருத்துத் தெரிவித்தது ஆறுதலாக இருந்தது.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெரியாத பல தகவல்கள். அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

ADMIN said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!

RAMA RAVI (RAMVI) said...

அருமையாக தகவல்களை தொகுத்து கொடுத்திருக்கீங்க.நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.பகிர்வுக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...