Friday, March 02, 2012

மற்றவை - அரவான்:விமர்சனம்


18ம் நூத்தாண்டுல மதுர கோட்டத்துக்கு பக்கத்துல இருக்கற வேம்பூர், சின்னவீரன்பட்டி அப்புறம் மாத்தூர் இந்த மூணு கிராமத்துல நடந்த கதையத்தான் இந்தப் படத்துல நம்ம இயக்குனரு வசந்தபாலன்  சொல்லியிருக்கிறாரு.

கதைப்படி, வேம்பூர்ல இருக்கற பசுபதியும், அவரோட நண்பர்களும் பக்கத்துல இருக்கற கிராமங்களுக்கு போய் களவாடிட்டு வந்து, அந்த நகைகள செட்டியார் கிட்ட கொடுத்து, அதுக்கு பண்ட மாற்றா ராகியும், கறியும் வாங்கிட்டு வந்து, ஊர்ல இருக்கற சனங்களுக்கெல்லாம் கஞ்சி ஊத்தறார். அப்படி இருக்கும் போது, ஒருநாளு பக்கத்து ஊர்ல இருக்கர ராணியம்மாவோட வைர நகைய இவங்கதான் களவாடிட்டு வந்திருப்பாங்கன்னு நெனச்சு ராணியம்மா ஊர்ல காவல்காக்கற ஆளுங்க, பசுபதி கிட்ட சண்ட போடுறாங்க. அவரும் 'நாங்க களவாடலன்னு" சொல்றாரு. ஆனா அவங்க கேட்க மாட்டேங்குறாங்க. அப்புறமா திருடு போன நகைய மீட்டுக் கொண்டாந்தா 6 மாசத்துக்கு உட்காந்து சாப்பிடற அளவுக்கு நெல் தர்றேன்னு வாக்கு கொடுக்குறாங்க.

அதனால பசுபதியும் , அவரோட ஆளுங்களும் வைர நகைய திருடறவன தேடிட்டு போறாங்க. அந்த நகைய நம்ம ஹீரோ ஆதிதான் திருடி வச்சிருக்காறு. ஒருவழியா ஆதிய கண்டுபிடிச்சு, அந்த நகைய வாங்கி ராணியம்மா ஊர் காவல்காரன் கிட்ட கொடுத்துடறார்.

இந்த சமயத்துல ஆதியும் பசுபதியும் நல்லா பழகறாங்க. ஆதி தன்னை அனாதைன்னு சொல்லிகிட்டு பசுபதி கூடவே இருக்கறாரு. எல்லார்கிட்டேயும் நல்ல பேர் வாங்குறாரு. ஒரு கட்டத்துல களவானிப்பயலுக நுழைய முடியாத ஊரான மாத்தூருக்கு திருடப் போயி, பசுபதி மாட்டிக்கிடறாரு. அவர காப்பாத்த போன ஆதியை மாத்தூர் காவல்கார தலைவன் கரிகாலன் பார்த்து, செம டென்சனாயிடறாரு. நாங்க தேடிட்டு இருந்த பலிகடா(கோயில்ல ஆடு மாடு பலி கொடுப்பாங்கள்ள..அது மாதிரி  ஊரோட மானத்த காப்பத்தறதுக்காக மனுசன பலி கொடுக்கறது.) இவன் தான்னு சொல்லிட்டு, ஆதியை அடிச்சு கூட்டிட்டுப் போறாரு. ஆதி ஏன் பலி கடா ஆனாரு?. கடைசில என்ன ஆச்சு அவருக்கு? இத தெரிஞ்சுக்கனும்னா மறக்காம தியேட்டருக்கு போயி படத்த பாருங்க.

ஆதி நடிப்பு:
ஆதி,நெஜமாவே இந்தப் படத்துக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்கிறாரு. கன்னுக்குட்டிய தூக்கிகிட்டு வேகமா ஓடறாரு. ஜல்லிக்கட்டு காளைய அடக்குறாரு. கஷ்டமான சீன்கள கூட டூப்பே இல்லாம செஞ்சிருக்கிறாரு. அப்புறம் ஒடம்ப தெடகாத்திரமா மாத்தியிருக்கிறாரு. நடிக்கிற மாதிரியே தெரியல. அசல் அந்த காலத்துல இருக்கிற மனுசனாவே வாழ்ந்திருக்கிறாரு!. மொத்தத்துல பின்னிட்டாரு!


பசுபதி நடிப்பு:
படத்தோட ஃபர்ஸ்ட் ஃஆப் முழுக்க பசுபதிதான் ஹீரோ மாதிரி எல்லா சீன்கள்ல வர்றாரு. வெயில் படத்துல உணர்வு பூர்வமா நடிச்சுருப்பாரு. இந்தப் படத்துல அந்த மாதிரி காட்சி எதுவுமே இல்ல. ஆனா கதைப்படி ஒரு களவானிப்பயலாவும், ஊருக்கு நல்லது செய்யற தலைவன் மாதிரியும் தேவையான நடிப்பத் தந்திருக்காரு.


"பேராண்மை" தன்ஷிகா, மலையாள "நீலத்தாமரை" புகழ் அர்ச்சனா கவி, ஸ்வேதா மேனன், கபீர் பேடி இப்படி நிறைய பேர் படத்துல நடிச்சுருக்காங்க. தன்ஷிகா நடிப்பு சூப்பர்! அப்புறம் பரத்தும் , அஞ்சலியும் கெஸ்ட் அப்பியரன்ஸ் பண்ணியிருக்காங்க. படத்துல எல்லார்த்தோட நடிப்பும் பாராட்டற அளவுக்கு இருக்கு. தேவையான இடத்துல எல்லாம் சிங்கம்புலி காமெடி பண்ணியிருக்கிறாரு.


இயக்குனர் வசந்த பாலன்:
பழங்கால தமிழர்களோட வாழ்க்கையை ,தமிழ் மொழியில ஒரு நல்ல படமா அற்புதமா கொடுத்ததுக்காக இயக்குனர் வசந்த பாலனுக்கு என்னோட ஹேட்ஸ் ஃஆப். அப்புறம் கேரக்டருக்கேத்த நடிகர்களையும் நடிகைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறாரு. தான் நெனச்ச விசயங்களை டீடெய்லாவும் படத்துல காட்டியிருக்கிறாரு.


ஃபர்ஸ்ட் ஆஃப்-வை விட இண்டர்வெல்லுக்கு அப்புறம் படம் ரொம்ப த்ரில்லிங்கா அருமையா இருக்கு. படத்தோட ஆர்ட், வசனங்கள்,திரைக்கதை இப்படி எல்லா விசயங்களையும் நிறைவா செஞ்சிருக்கிறாரு. இப்படி ஒரு படம் எடுத்ததற்காக, வசந்தபாலனை நிச்சயம் தமிழ் சினிமா கொண்டாடும். அப்புறம் படத்துல ஒரு அருமையான மெஸேஜ் சொல்லியிருக்கிறாரு!

ஒரே ஒரு கேள்வி இயக்குனர் கிட்ட கேட்கறேன். வெயில், அங்காடித் தெரு, அரவான் இப்படி எல்லா படத்திலேயும்(ஆல்பம் தவிர) சோகமான க்ளைமாக்சை அமைச்சிருக்கீங்க? ஏன்? படம் முடிஞ்சு திரும்பும் போது க்ளைமாக்ஸ் கொடுத்த வலி மனசுக்குள்ள வர்றதை தடுக்க முடியல.

ப்ளீஸ்..அடுத்த படத்திலயாவது சந்தோசமான க்ளைமாக்ஸ் வர்ற மாதிரி கதையை தேர்ந்தெடுங்க.

அப்புறம் படத்துல குறையாக தெரியறதுதான் பாட்டு சீன்தான். நல்லா போயிட்டிருக்கிற கதைல பாட்டு சீன் வந்து கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுது. தேவையில்லாத எடத்தில எல்லாம் பாட்டு வருது.


ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் தெளிவாவே இல்லை. அப்புறம் ஆதிக்கும், பசுபதிக்கும் இருக்கிற நட்பை இன்னும் கொஞ்சம் ஆழமா காட்டியிருக்கலாம்.
ஜல்லிகட்டு காட்சியில ஜனங்க ஆரவாரமே இல்லாம பார்க்கறது குறையா தெரியுது.

ஆர்ட் டைரக்ஷன்:
படத்தோட பெரிய பலமே ஆர்ட் டைரக்ஷனும் ஒளிப்பதிவும் தான். அப்படியே 18ம் நூத்தாண்டைக் கண் முன் காட்டியிருக்கிறாரு. கிரேட் ஜாப்!. எக்ஸெலண்ட்!.


இசை:
பாடகரான கார்த்திக் இசையமைச்ச மொதல் படம் இது. தேவையான எடத்தில எல்லாம் பி.ஜி.எம் இல்லாம சைலண்டாக காட்டும் போது, அந்த சீன்களப் பார்க்கறபோது ரொம்ப அருமையா இருக்கு. நிலா நிலா பாட்டு, அரவான் பாட்டு நல்லா இருக்கு. பி.ஜி.எம் ரொம்ப நல்லா இருக்கு.

அரவான் A different, Classical  tamil film

############################################################